Translate

Saturday 8 December 2012

என்னைப்பார்த்து ஜாதி வெறியன் என்கின்றனர் : ராமதாஸ் ஆவேசப்பேச்சு

திருக்கோவிலூரில் நேற்று பா.ம.க பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பா.ம.க. நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ் பேசினார். 

அப்போது அவர், ''தமிழகத்தில் நடைபெறும் 2016 சட்டமன்ற தேர்தலில் 110 இடங்களில் நாம் வெற்றிபெறப்போகின்றோம். இதுவரை வன்னிய மக்களிடம் ஒற்றுமை இல்லாமல் இருந்து வந்தது. தற்போது நாம் ஒற்றுமையாகிவிட்டோம். எனவே நாம் ஆட்சி அதிகாரத்தை பிடிப்பது சுலபம். வன்னியர்கள் ஆண்டால்தான் நாடு உருப்படும். 

தி.மு.க, அ.தி.மு.க 2 கட்சிக்கும் மாறி, மாறி ஓட்டுபோட்டு எந்த முன்னேற்றமும் இல்லை. தமிழகத்தில் ஒரு வன்னியன் முதல்வராக வில்லை. அ.தி.மு.க 6 முறையும், தி.மு.க 6 முறையும், காங்கிரஸ் 4 முறையும் ஆண்டுவிட்டது. பா.மக.வுக்கு ஒருமுறை ஆளவாய்ப்பு கொடுங்கள். இதற்கு வன்னியர்கள் அனைவரும் ஓட்டுபோடவேண்டும்.

வன்னிய சமுதாயத்தை ஒன்றிணைத்தால் என்னைப்பார்த்து ஜாதி வெறியன் என்கிறனர். ஆனால் கர்நாடகா, ஆந்திரா, பீகார், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் ஜாதியை வைத்து தான் அரசியல் நடக்கிறது. ஆட்சியை பிடிக்கின்றனர். இந்தியாவில் அனைத்து பகுதியிலுமே ஜாதி அரசியல்தான் நடக்கிறது. வன்னியன் ஆட்சிக்கு வந்தால் அனைவருக்கும் சமஉரிமை கிடைக்கும். சமுதாயம் கல்வி, வேலைவாய்ப்பில் முன்னேறவேண்டும். அதற்கான வழிமுறைகள் என்ன என்பது பற்றி சொல்லி வருகின்றோம்.

இந்த சமுதாயம் முன்னேறவேண்டும். இதற்கு வன்னிய சமுதாயத்தைச் சேர்ந்தவன் முதல் அமைச்சராக வரவேண்டும். பா.ம.க ஆட்சிக்கு வந்த உடன் விவசாயம், கல்வி, மருத்துவம் ஆகியவற்றிற்கு முதலில் முன்னுரிமை கொடுப்போம். விவசாயிகளுக்கு விதை, உரம் இலவசமாக கொடுப்போம். மாநிலத்திலும், மத்தியிலும் விவசாயத்துக்கு தனி பட்ஜெட் போடச்சொல்லி பல ஆண்டுகளாக பா.ம.க வற்புறுத்திவருகின்றது. ஆனால் இதனை மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்வதே கிடையாது.
பா.ம.க வுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள், மாற்றத்தை தாருங்கள். தமிழகத்தை மாற்றி காட்டுகின்றோம். வரப்போகும் தேர்தலில் தேசியகட்சிகளுடனோ, மாநிலத்தில் உள்ள திராவிட கட்சிகளுடனோ, மற்ற கட்சிகளுடனோ கூட்டணி வைக்காமல் ஜாதி அமைப்புகளுடன் கூட்டணி வைக்கப்போகின்றேன்.

இதற்காக யார் என்ன சொன்னாலும் கவலைப்பட போவதில்லை. வரும் 17-ம் தேதி நடைபெறும் மதுக்கடை பூட்டு போடும் போராட்டம் வெற்றிகரமாக நடந்திட வேண்டும். நிறைவாக கேட்கிறேன் பா.ம.க வுக்கு வாய்ப்பு கொடுங்கள், மாற்றத்தைதாருங்கள்’’என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment