Translate

Saturday 5 January 2013

நாட்டுப்பற்றாளர் நடராஜா இராஜசூரியர்- (ரங்கன் / குபேரன்)

நாட்டுப்பற்றாளர் நடராஜா இராஜசூரியர்-
(ரங்கன் / குபேரன்) 
*******************************

தமிழ் மக்களுக்கும் தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கும் அளப்பரிய பணிசெய்த திரு. நடராஜா இராஜசூரியர் (ரங்கன் / குபேரன்) அவர்கள் 27.12.2012 அன்று சுகவீனம் காரணமாகச் சாவடைந்தார்.

யாழ்ப்பாணம் காரைநகரைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் தமிழீழ விடுதலைப் போராட்டம் ஆயுதவழியில் முனைப்புப் பெற்ற காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து குபேரன் என்ற பெயருடன் இந்தியாவில் மூன்றாவது பயிற்சி முகாமில் அடிப்படைப் பயிற்சியைப் பெற்றார். அதன்பின்னர் தாயகத்தில் பல களங்களிலும் தளங்களிலும் பணியாற்றி விடுதலைப் போராட்த்தில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துச் செயற்பட்டு வந்தார்.



மிக இக்கட்டான காலப்பகுதியில் தேசத்தின்குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் மெய்ப்பாதுகாப்பாளனாகவும் பராமரிப்பாளனாகவும் பணியாற்றி தனக்குத் தரப்பட்ட பணியைச் சிறப்பாகச் செய்தார்.

பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து தன்னை விலத்திக் கொண்ட போதிலும் தாயக விடுதலைக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் அயராது உழைத்து வந்தவராகவே குபேரன் விளங்கினார். புலம்பெயர்ந்த பின்பும் எமது அமைப்புக்கான உழைப்பை அவர் தொடர்ந்து வழங்கியதுடன், தனது இறுதிக்காலத்தில் தாயகத்தில் வாழும் எமது மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக உழைத்து வந்தார். அன்னியநாட்டில் பத்தாண்டுகளுக்கும் மேலாக சித்திரவதைகளுடன்கூடிய சிறைவாழ்க்கையை இவர் கழிக்க நேர்ந்தது தமிழீழ விடுதலைக்காக இவர் கொடுத்த அளப்பரிய விலையாக அமைந்தது.

எண்ணற்ற தியாகங்களையும் அர்ப்பணிப்புக்களையும் புரிந்தபடி பயணிக்கும் எமது விடுதலைப் போராட்டத்தில் திரு. நடராஜா இராஜசூரியர் (ரங்கன் / குபேரன்) அவர்களின் பங்களிப்பும் முக்கியமானது. எமது போராட்டத்துக்காக உழைத்து உயிர்நீத்த செயற்பாட்டாளர் வரிசையில் குபேரன் அவர்களும் இணைந்து கொள்கிறார். இவரது அர்ப்பணிப்பையும் உழைப்பையும் முன்னிட்டு குபேரன் அவர்களை 'நாட்டுப்பற்றாளர்' என மதிப்பளிப்பதில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு பெருமை கொள்கின்றது.

திரு. குபேரன் அவர்களை நினைவுகூரும் இவ்வேளையில் அவரது பிரிவால் துயருறும் இவரது குடும்பத்தினர், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் எமது இரங்கலைத் தெரிவிக்கின்றோம்.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” 

2 comments:

  1. தமிழ் செய்திகளை தெரிந்துக்கொள்ள தொடர்ந்து இணைந்திருங்கள்.Tamil News

    ReplyDelete